பதிவு செய்த நாள்
26
ஏப்
2025
11:04
உத்திராடம்.. முயற்சி வேண்டும்: உங்கள் நட்சத்திர நாதனான சூரியனுக்கு, ராகு கேது இருவரும் பகைவர்கள் என்றாலும், அவர்கள் கோச்சார சஞ்சாரத்தின் போது சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை வழங்க வேண்டியவராகிறார்கள். உத்திராடம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ராகு முயற்சி ஸ்தானத்திலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு குடும்ப ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். கேது, உத்திராடம் 1 ம் பாதத்தினருக்கு பாக்ய ஸ்தானத்திலும் 2,3,4 ம் பாதத்தினருக்கு அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார்.
இதனால் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ராகு முன்னேற்றத்திற்கு வழியமைப்பார். முயற்சிகளை வெற்றியாக்குவார். நினைத்த வேலைகளை நடத்தி முடிக்கும் அளவிற்கு சூழ்நிலையை உண்டாக்குவார். வசதி வாய்ப்புகளை அதிகரிப்பார். அந்தஸ்து, செல்வாக்கை உயர்த்துவார். 2, 3, 4ம் பாதத்தினருக்கு குடும்பத்தில் குழப்பம், சண்டை சச்சரவை அதிகரிப்பார். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு, பிரிவினையை உண்டாக்குவார். எதிர்பார்ப்பில் தடை ஏற்படுத்துவார். வேலைகளில் பிரச்னையை உண்டாக்குவார். லாபத்தை மட்டுப்படுத்துவார். எதிலும் நிம்மதி என்பது இக்காலத்தில் இல்லாமல் போகும். மனம் குழப்பமடையும். குடும்பத்தில் கஷ்டம் அதிகரிக்கும். எந்த ஒன்றையும் கடன் வாங்கி சமாளிக்க வேண்டிய நிலை உண்டாகும். வாங்கிய கடனை அடைக்க முடியாமல் சங்கடப்பட வேண்டியதாக இருக்கும். மனதில் ஏதேனும் குறைபாடு இருந்து கொண்டே இருக்கும்.
கேது சஞ்சார நிலையால், உத்திராடம் 1ம் பாதத்தினருக்கு முயற்சி அதிகரிக்கும். அதன் வழியே செய்யும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பணியாளர்கள் நிலை உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். பொருளாதார நிலை சீராகும் என்றாலும் தந்தையின் உடல்நிலையில் பாதிப்பு உண்டாகும். 2, 3, 4ம் பாதத்தினருக்கு வேலைகளில் தடை, தாமதம் ஏற்படும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் இல்லாமல் போகும். பணியாளர்களுக்கு நெருக்கடி அதிகரிக்கும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிவோருக்கு நிம்மதி இல்லாமல் போகும். சிலருக்கு வேலை பறிபோகும். வருமானம் தடைபடும். வண்டி வாகனங்களால் விபத்து ஏற்படும். குடும்பத்திலும் போராட்டம் மிகுந்திருக்கும். நெருக்கடி நிலை உண்டாகும்.
சனி சஞ்சாரம்: கும்பத்தில் ராகுவும், சிம்மத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் நாளில் சனி பகவான் கும்பத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார். 2026 மார்ச் 6ல் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால், உத்திராடம் 1 ம் பாதத்தினருக்கு, 2026 மார்ச் 6 வரை, 3ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியால் நினைத்த வேலைகள் நடந்தேறும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். அசாதாரண துணிச்சல் உண்டாகும். உடல், மன நிலை சீராகும். பொருளாதார நிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும்.
2026 மார்ச் 6 முதல் 4ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியால், உழைப்பு அதிகரிக்கும். வேலையில் பிரச்னை உருவாகும். தாயாரின் உடல்நிலையில் பாதிப்பு உண்டாகும். உங்கள் உடல்நிலையிலும் பாதிப்பு இருந்து கொண்டே இருக்கும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 வரை பாதச் சனியாக, குடும்பத்தில் நிம்மதியின்மை, பண வரவில் தடை, கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலை, உடல்நிலையில் பின்னடைவு, உறவுகளுடன் பகையை ஏற்படுத்துவார். 2026 மார்ச் 6 முதல் இந்நிலை மாறும். இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் உங்கள் வாழ்க்கை மாறும். ஏழரை ஆண்டு நெருக்கடியில் இருந்து விலகி முன்னேற்றப் பாதையில் நடை போடுவீர்கள். விருப்பம் பூர்த்தியாகும். செயல்கள் லாபமாகும். செல்வாக்கு உயரும்.
குரு சஞ்சாரம்
மே 11 வரை ரிஷபத்திலும், அதன்பின் மிதுனத்திலும், அக்.8 முதல் கடகத்திற்கு அதிசாரமாகவும் செல்பவர், நவ.18 முதல் அங்கு வக்கிரமடைகிறார். அதே வக்கிர நிலையில் டிச. 21ல் மிதுனத்திற்கு வருபவர் 2026 மார்ச் 17ல் வக்கிர நிவர்த்தி அடைகிறார். அங்கிருந்து மே 26ல் கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார் என்பதால் 1ம் பாதத்தினருக்கு மே11 வரை எடுக்கும் வேலைகளில் இழுபறி, நெருக்கடி, உடல் பாதிப்பு ஏற்பட்டாலும், அவரது பார்வைகளால் தொழில் முன்னேற்றம் அடையும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். வேலைக்காக முயற்சித்து வந்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் காணாமல் போகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மே11 முதல் ஏழாமிடத்தில் சஞ்சரிக்கும் குருவால் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். திருமண வயதினருக்கு வரன் அமையும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். சொந்த வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். 2,3,4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே11 வரை எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். எடுத்த வேலைகள் நடந்தேறும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். மே 11 முதல் 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால் இந்நிலை மாறும். எதிர்ப்பு அதிகரிக்கும். உடல்நிலை பாதிக்கும் என்றாலும் தொழிலில் ஆதாயம் உயரும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். பணவரவு அதிகரிக்கும்.
பொதுப்பலன்
1ம் பாதத்தினருக்கு ராகு, சனி சஞ்சாரமும், மே 11 முதல் ராசிக்கு குருப்பார்வையும் யோகத்தை உண்டாக்கும் நிலையில், 2,3,4 ம் பாதத்தினருக்கு மே11 வரை குருவும், அதன்பின் அவரது பார்வைகளும், 2026 மார்ச்6 முதல் சனியும் நன்மையை உண்டாக்குவார் என்பதால் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். வருவாய் அதிகரிக்கும். நினைத்த வேலைகள் நடந்தேறும்.
தொழில் : தொழிலில் இருந்த தடைகள் விலகும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய வாடிக்கையாளர் அதிகரிப்பர். எலக்ட்ரானிக்ஸ், பேக்டரி, ஆட்டோ மொபைல்ஸ், ஸ்டேஷனரி, பதிப்பகம், பத்திரிகை, சினிமா, டிவி, கம்ப்யூட்டர் தொழில்கள், வாகன உற்பத்தி, விற்பனை, பில்டர்ஸ், எக்ஸ்போர்ட், விவசாயம் சார்ந்த தொழில்கள் முன்னேற்றம் அடையும்.
பணியாளர்கள் : இதுவரை இருந்த நெருக்கடி விலகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். சிலர் இருக்கும் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு வேலைக்கு செல்வர். அதனால் வருமானம் உயரும். அரசு பணியாளர்களுக்கு உண்டான பிரச்னைகள் முடிவிற்கு வரும். தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும்.
பெண்கள்: நீண்டநாள் கனவு நனவாகும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் இல்லாமல் போகும். திருமண வயதினருக்கு இனிய இல்லறம் அமையும். சிலருக்கு காதல் திருமணம் நடக்கும். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த் நல்ல தகவல் வரும். வேலையில் முன்னேற்றம் உண்டாகும். கணவரின் அன்பு அதிகரிக்கும். மனதில் சந்தோஷம் நிலைக்கும்.
கல்வி:படிப்பில் கவனக்குறைவு, அலட்சியம் சிலருக்கு ஏற்பட்டிருந்தாலும் பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்ணுடன் வெற்றி கிடைக்கும். உயர் கல்வி கனவு நனவாகும்.
உடல்நிலை: 1 ம் பாதத்தினருக்கு எந்த நோய் வந்தாலும் வந்த வழி தெரியாமல் பறந்தோடும். 2,3,4 ம் பாதத்தினர் இக்காலத்தில் உடல்நலனில் கவனமாக இருக்க வேண்டும். சிலர் விபத்தை சந்திக்கும் நிலை ஏற்படலாம்.
குடும்பம்: குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்னை நீங்கும். கருத்து வேறுபாட்டால் பிரிந்தவர்கள் இணைவர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். பொன், பொருள் சேரும். புதிய வீடு, வாகனம் என கனவு நனவாகும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும்.
பரிகாரம்: சரபேஸ்வரரை வழிபட்டால் சங்கடம் அனைத்தும் விலகும்.
திருவோணம்: செயலில் கவனம்
இதுவரை உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரித்து வாழ்வைவளமாக்கியதுடன் நினைத்ததை நடத்தித் தந்த ராகு, ஏப்.26ல் தன குடும்ப வாக்கு ஸ்தானமான 2ம் இடத்திலும், பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து கடவுள் அருளையும், பெரிய மனிதர்களின் நட்பையும் வழங்கிய கேது, அஷ்டம ஸ்தானமான 8ம் இடத்திலும் சஞ்சரிக்க உள்ளனர்.
தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு, இனம் புரியாத பயத்தை உண்டாக்குவார். செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும் அதில் ஆர்வம் இருக்கும். ஆனால் திட்டமிட்டவை எதுவும் கூடி வராமல் போகும். குறுக்கு வழியில்சிலர் முயற்சி செய்வீர்கள் என்றாலும் அதில் சட்ட சிக்கல்கள் உண்டாகும். தொழிலில் மந்த நிலை இருக்கும். வருமானமும் தடைபடும். குடும்பத்தில் பிரச்னை உண்டாகும். அந்நியரின் தலையீடு அதிகளவில் இருக்கும். வசிக்கும் இடத்தில் அக்கம் பக்கத்தினரால் சங்கடம் உண்டாகும். தொழில், வேலையில் வீண் அலைச்சல் ஏற்படும். சிலர் தொழிலை மாற்றம் செய்ய முயற்சிப்பீர்கள். பணியாளர்களுக்கு இடமாற்றம் ஏற்படும். மேல் அதிகாரிகளிடம் இக்காலத்தில் அனுகூல பலனை எதிர்பார்க்க முடியாது. வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் பாதிப்பு உண்டாகும். வெளிநாடு செல்ல மேற்கொண்ட முயற்சியில் தடை, ஏமாற்றம் உண்டாகும். நினைத்த வேலைகள் எதுவும் கூடிவராமல் மனதளவில் சங்கடத்தை அனுபவிக்க நேரிடும்.
கடந்த ஒன்றரை ஆண்டாக பாக்ய ஸதானத்தில் சஞ்சரித்து உங்களை உற்சாகப்படுத்தி வந்த கேது, அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சோதனை, வேதனைகள் அதிகரிக்கும் என்றே சொல்ல வேண்டும். 8ம் இடத்தில் கேது சஞ்சரிக்கும் போது, உடல் நிலையில் சங்கடத்தை அதிகரிப்பார். அல்லது நெருங்கிய உறவினரின் உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்துவார். எங்கு போனாலும் ஏதாவது பிரச்னை முன்னால் வந்து நிற்கும். நீங்கள் நினைத்தபடி எந்த ஒன்றையும் சாதிக்க முடியாத அளவிற்கு இக்கால நிலை இருக்கும். சொந்த ஊரை விட்டு வெளியூர் செல்ல அல்லது தொழில் செய்யும் நிலை சிலருக்கு உண்டாகும். அரசு பணியாளர்களுக்கு இது நெருக்கடியான காலகட்டம். சிலருக்கு பணி நீக்கம் என்ற நிலை ஏற்படும். வருமானத்தில் தடை உண்டாகும். தொழிலில் முழு கவனம் செலுத்துவதுடன் எதையும் யோசித்து செயல்படுவதன் மூலம் சங்கடங்களை தவிர்க்கலாம். சிலர் எதிர்பாராத விபத்துகளை சந்திக்கலாம். அதனால் வாகனப் பயணத்தில் கவனம் தேவை. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் நிதானமாக வைப்பது நல்லது. எதிர்பாலினரால் அவமானப்படும் நிலை சிலருக்கு உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறாத நிலை உண்டாகும். இவையெல்லாம் 8 ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேது வழங்கும் பலன்களாகும்.
சனி சஞ்சாரம்
கும்பத்தில் ராகுவும், சிம்மத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் நாளில் சனி கும்பத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார். 2026 மார்ச் 6ல் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் மார்ச் 6 வரை ஏழரைச் சனியில் பாதச்சனியாக சஞ்சரிப்பவர் குழப்பத்தை அதிகரிப்பார். வருமானத்தில் தடை உண்டாக்குவார். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலையை ஏற்படுத்துவார். உடல்நிலையில் பின்னடைவை உண்டாக்குவார். 2026 மார்ச் 6 ல் மூன்றாமிடத்திற்கு செல்லும் சனியால் உங்கள் நிலை மாறும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்திக் கொள்வீர்கள். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றமடையும். முயற்சி யாவும் வெற்றியாகும். ஆதாயம் கூடும். முன்னேற்றப் பாதையில் நடை போடுவீர்கள்.
குரு சஞ்சாரம்
மே 11 வரை ரிஷபத்திலும், அதன்பின் மிதுனத்திலும், அக்.8 முதல் கடகத்திற்கு அதிசாரமாகவும் செல்பவர், நவ.18 முதல் அங்கு வக்கிரமடைகிறார். அதே வக்கிர நிலையில் டிச. 21ல் மிதுனத்திற்கு வருபவர் 2026 மார்ச் 17ல் வக்கிர நிவர்த்தியடைகிறார். அங்கிருந்து மே 26ல் கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார் என்பதால், மே11 வரை 5ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் திருமண வயதினருக்கு கழுத்தில் மாலை ஏறும். எடுத்த வேலைகள் நடந்தேறும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும், அந்தஸ்து உயரும். மே11 முதல் 6ம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு, இந்நிலையில் மாற்றத்தை உண்டாக்குவார். எதிர்ப்பு அதிகரிக்கும். உடல்நிலை பாதிக்கும் என்றாலும் 10, 2 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் தொழில் முன்னேற்றம் பெறும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். பணப்புழக்கம் இருக்கும்.
பொதுப்பலன்
மே11 வரை குருவும், அதன் பின் அவரது பார்வைகளும், 2026 மார்ச் 6 முதல் சனியும், செவ்வாயின் 3,6,11 ம் இட சஞ்சாரமும், சூரியனின் 3,6,10,11 ம் இட சஞ்சாரமும் உங்கள் நிலையை உயர்த்தும். எடுத்த பணிகளை வெற்றியாக்கும். வருமானத்தை அதிகரிக்கும். நன்மையை உண்டாக்கும், உங்கள் முயற்சிகளை லாபமாக்கும். அந்தஸ்தை உயர்த்தும்.
தொழில்:
ராகு கேது சஞ்சார நிலை எதிர்மறையாக இருந்தாலும், சூரியன், செவ்வாய், குரு, 2026 மார்ச் 6 முதல் சனி ஆகியோர் உங்கள் நிலையை உயர்த்துவர். தொழிலில் ஏற்படும் தடைகள் விலகும். உங்கள் முயற்சிக்கேற்ற ஆதாயம் உண்டாகும். இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, உதிரி பாகம் தயாரிப்பு, வாகன விற்பனை, ஆட்டோமொபைல்ஸ், பேக்டரி, டிராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், இன்ஜினியரிங், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம், ஆடை ஆபரணம், அழகு சாதனம், பேன்சி ஸ்டோர், விவசாயம் சம்பந்தப்பட்ட தொழில்களில் லாபம் கூடும்.
பணியாளர்கள்
சூழ்நிலையை அறிந்து செயல்படுவது அவசியம். உடன் பணி புரிபவர்களே உங்களுக்கு எதிராக மாறுவர். சிலர் வேலையை இழக்க நேரிடும். அரசு பணியாளர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். சிலர் அவமானத்திற்கும் ஆளாக நேரும். மெமோ, எதிர்பாராத இடமாற்றம் என சிலருக்கு ஏற்படும். உடன் இருப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
பெண்கள்
உடல் நிலையில் கவனம் தேவை. மே 11 வரை எல்லாம் நன்றாக போனாலும் அதன்பின் நெருக்கடி அதிகரிக்கும். உங்களை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் சிலர் வதந்தியை உருவாக்குவர். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை இருக்கும். பணி இடத்திலும் நெருக்கடி அதிகரிக்கும். யாரையும் நம்பி ரகசியங்களை சொல்ல வேண்டாம். கணவரின் ஆலோசனையை ஏற்று செயல்படுவது நல்லது. எட்டாமிடத்தில் கேது சஞ்சரிப்பதால் கணவரின் உடல்நிலையில் கவனம் தேவை.
கல்வி
மே 11 வரை உங்கள் கனவுகள் நனவாகும். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லுாரியில், விரும்பிய பாடப்பிரிவில் சேர்வீர்கள்.
உடல்நிலை
உடல்நிலையில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். அடிக்கடி மருத்துவமனை செல்ல நேரிடும். சிலர் விபத்தில் சிக்கி கடும்பாதிப்பிற்கு ஆளாக வாய்ப்பிருப்பதால் கவனமாக இருப்பது நல்லது.
குடும்பம்
தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செயல்பட வேண்டிய காலம் இது. இல்லையெனில் பிரிவு, பிரச்னை ஏற்படும். குடும்பத்திற்குள் பிறர் தலையீடு இல்லாமல் பார்ப்பது நல்லது. குடும்பம், குழந்தைகள் என பிடிப்புடன் வாழ்வதும், குடும்ப நலனில் அக்கறை கொள்வதும் நன்மையளிக்கும்.
பரிகாரம்: மங்களநாதசுவாமியை வழிபட்டால் சங்கடம் அனைத்தும் விலகும்.
அவிட்டம்: போராட்டம் முடிவிற்கு வரும்
உங்கள் நட்சத்திர நாதனான செவ்வாய்க்கு ராகு, கேது இருவரும் பகைவர்கள் என்றாலும், கோச்சார ரீதியாக அவர்கள் சஞ்சரிக்கும் போது, சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை வழங்க வேண்டியவர்களாகிறார்கள். அவிட்டம் 1, 2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ராகு, தன குடும்ப வாக்கு ஸ்தானத்திலும், 3,4ம் பாதத்தினருக்கு ஜென்ம ராசிக்குள்ளும் சஞ்சரிக்கிறார். கேது, அவிட்டம் 1,2ம் பாதத்தினருக்கு அஷ்டம ஸ்தானத்திலும், 3,4ம் பாதத்தினருக்கு சப்தம ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார்.
இதனால் ராகு 1,2ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் நிம்மதியற்ற நிலையும், பண வரவில் தடையும், மனதில் பயமும், செய்யும் தொழிலில் ஆதாயமற்ற நிலையும், சட்டத்திற்கு புறம்பான செயலும், குடும்பத்தில் அடுத்தவரின் தலையீடும், இருக்கும் இடத்தில் நெருக்கடியும், வேலையில் எதிர்பாராத இட மாற்றமும் உண்டாகும். 3, 4 ம் பாதத்தினருக்கு உற்றார், உறவினருடன் கருத்து வேறுபாடு, பகைமை, இடமாற்றம், தொழில் மீது அக்கறை, மனதில் ஆசைகளை அதிகரிப்பார். புதுப்புது முயற்சிகளை மேற்கொள்ள வைப்பார். உங்களை அடையாளப் படுத்திக் கொண்டு எதிலும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவார்.
கேது, அவிட்டம் 1, 2ம் பாதத்தினருக்கு இக்காலத்தில் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், தொட்ட காரியங்கள் அனைத்திலும் தோல்வியை ஏற்படுத்துவார். மனம், உடலில் நலிவை உண்டாக்குவார். சிலரை விபத்தில் சிக்க வைப்பார். மருத்துவச் செலவு அதிகரிக்கும். சொந்த பந்தங்களுடன் கருத்து வேறுபாடு, வேலை, தொழிலில் போராட்டம், சிலருக்கு அவமானத்தை ஏற்படுத்துவார். இருக்கும் இடத்தில் மாற்றம், வெளியூரில் வசிக்க வேண்டிய நிலையை உண்டாக்குவார். 3, 4ம் பாதத்தினருக்கு, புதிய உறவிற்கு வழிகாட்டுவார். கணவன் மனைவிக்குள் பிரச்னை, பிரிவு என்ற நிலையை உண்டாக்குவார். உறவினர்களை விட்டு விலக வேண்டிய நிலையை ஏற்படுத்துவார். மனம் போக்கில் வாழச் செய்வார். வசிக்கும் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்லும் நிலையை உருவாக்குவார்.
சனி சஞ்சாரம்
கும்பத்தில் ராகுவும், சிம்மத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் நாளில் சனி பகவான் கும்பத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார். 2026 மார்ச் 6ல் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் 1,2 ம் பாதத்தினருக்கு மார்ச் 6 வரை குடும்பத்தில் குழப்பம், நிம்மதியற்ற நிலை, வருமானத்தில் தடை, உடல்நிலையில் நலிவை உண்டாக்குவார். 2026 மார்ச் 6 முதல் இந்த நிலை மாறும். 3ம் இடத்து சனி முயற்சிகளை வெற்றியாக்குவார். முன்னேற்றத்தை உண்டாக்குவார். செல்வாக்கு, அந்தஸ்தை உயர்த்துவார். தடைபட்ட வேலைகளை நடத்தி வைப்பார். ஆரோக்கியத்தை சீராக்குவார். எதிர்பார்ப்பை பூர்த்தியாக்குவார். 3,4 ம் பாதத்தினருக்கு மார்ச் 6 வரை உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துவார். பணத்தட்டுப்பாட்டை அதிகமாக்குவார். நண்பர்கள், உறவினரை பகையாளிகளாக மாற்றுவார். செய்யும் தொழிலில் பாதிப்பை ஏற்படுத்துவார். நன்றாகப் பழகி வந்தவர்களையும் உங்களை விட்டு விலக வைப்பார். மனதில் பயத்தை அதிகரிப்பார். மார்ச் 6 முதல் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை இருக்கும். அஜாக்கிரதையால் பொன், பொருள் களவு போகும். வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் பாதிப்பு உண்டாகும். பெண்களின் மாங்கல்யத்திற்கு சோதனை ஏற்படும். தொழில், வேலையில் நிம்மதியற்ற நிலை இருக்கும். மனதில் குழப்பம் இருந்து கொண்டே இருக்கும்.
குரு சஞ்சாரம்
மே 11 வரை ரிஷபத்திலும், அதன்பின் மிதுனத்திலும், அக்.8 முதல் கடகத்திற்கு அதிசாரமாகவும் செல்பவர், நவ. 18 முதல் அங்கு வக்கிரமடைகிறார். அதே வக்கிர நிலையில் டிச. 21ல் மிதுனத்திற்கு வருபவர் 2026 மார்ச் 17ல் வக்கிர நிவர்த்தி அடைகிறார். அங்கிருந்து மே 26ல் கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். இந்த நிலைகளால், 1, 2 ம் பாதத்தினருக்கு
மே 11 வரை நினைப்பது நிறைவேறும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். திருமண வயதினருக்கு கழுத்தில் மாலை ஏறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். மே 11 முதல் இந்நிலையில் மாற்றம் உண்டாகும். எதை எடுத்தாலும் ஏதாவது ஒரு பிரச்னை உண்டாகும் என்றாலும், குரு பார்வையால் தொழில், வேலையில் இருந்த சங்கடங்கள் விலகும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பட்டம், பதவி என பெருமை ஏற்படும். 3, 4ம் பாதத்தினருக்கு மே 11 வரை குரு பார்வைகளால் ஆரோக்கியம் மேம்படும். செல்வாக்கு வெளிப்படும். தொழில் முன்னேற்றம் பெறும். சுபச்செலவு அதிகரிக்கும். மே 11 முதல் மிதுன குருவின் பார்வை ராசிக்கு உண்டாவதால், ஜென்மச் சனி, ராகுவால் உண்டாகும் அசுப பலன் காணாமல் போகும். பெரியோரின் ஆதரவு உண்டாகும். வேண்டுதலை நிறைவேற்ற கோயில்களுக்கு செல்வீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சிலருக்கு காதல் அரும்பும். வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கு மறுமணம், புதிய உறவு அமையும். வாழ்வில் புதிய பாதை தெரியும்.
பொதுப்பலன்
அவிட்டம் 1, 2ம் பாதத்தினருக்கு மே11 வரை குருவும், அதன்பின் அவரது பார்வைகளும், 2026 மார்ச் 6 முதல் சனியும், 3, 4 ம் பாதத்தினருக்கு மே 11 முதல் குருவின் சஞ்சாரமும், பார்வைகளும், இருவருக்கும் செவ்வாயின் 3,6,11 ம் இட சஞ்சாரமும், சூரியனின் 3,6,10,11 ம் இட சஞ்சாரமும் சாதகத்தை உண்டாக்கும் என்பதால் உங்கள் நிலை உயரும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும். வாழ்வில் புதிய பாதை தெரியும்.
தொழில்: தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். உங்கள் திறமை வெளிப்படும். இடையில் தடைபட்டிருந்த தொழிலை மீண்டும் கையில் எடுப்பீர்கள். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், மெடிக்கல், கெமிக்கல், உணவகம், இயந்திரத்தொழில், வாகன உற்பத்தி, ஆட்டோ மொபைல்ஸ், டிராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், விவசாயம், பங்கு வர்த்தகம், பேன்சி ஸ்டோர், மினரல் வாட்டர், கூல்டிரிங்ஸ், பெட்ரோலியம், அழகு சாதனங்கள், கற்பித்தல், போதித்தல், வாதாடுதல், பலன் உரைத்தல், சினிமா, டி.வி. தொழில்கள் முன்னேற்றமடையும்.
பணியாளர்கள் ராகு கேது சஞ்சாரம் சாதகமாக இல்லை என்றாலும் குருவின் சஞ்சாரங்களும், பார்வைகளும் உங்களைப் பாதுகாக்கும். வேலைப் பார்க்கும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த ஊதியமும் சலுகைகளும் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு உண்டாகும். எதிர்பார்த்த பதவி உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும் என்றாலும் இக்காலத்தில் வேலையில் நேர்மையாகவும் கவனமாகவும் இருப்பது அவசியம்.
பெண்கள்
படிப்பு, திருமணம், மறுமணம் என கனவு நனவாகும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். வேலைத் தேடுபவர்களுக்கு கவுரவமான வேலை கிடைக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு உண்டாகும். பொன், பொருள், புகழ் சேரும். மனதில் இருந்த இறுக்கம் காணாமல் போகும். கணவருடன் இணக்கம் உண்டாகும். சுய தொழில் முன்னேற்றமடையும்.
கல்வி:
படிப்பின் மீது அக்கறை அதிகரிக்கும். நண்பர்கள் உங்களை ஊக்கப்படுத்துவர்/ பொதுத் தேர்வில் வெற்றி உண்டாகும். உயர் கல்விக்காக மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.
உடல்நிலை
சனி, ராகு, கேது சஞ்சார நிலைகள் எதிர்மறையாக இருப்பதால் உடல்நலனில் கவனமாக இருப்பது அவசியம். பரம்பரை வியாதிகளும், தொற்று நோய்களும் பாரம்பரிய மருத்துவத்தால் குணமாகும். இயந்திரப் பணியில் ஈடுபடும்போதும், வாகனத்தை இயக்கும்போதும் மிக கவனம் தேவை.
குடும்பம்
குரு சஞ்சாரமும், பார்வைகளும் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் உண்டான குழப்பங்கள் இருந்த இடம் தெரியாமல் போகும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவீர்கள். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். புதிய சொத்து, வாகனம் என வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும்.
பரிகாரம்: காளத்தி காளத்தியப்பரை வழிபட்டுவர சங்கடம் விலகும்.