 |
ஒரு சமயம் மூன்று ரிஷிகள் வான் வழியே சஞ்சாரம் செய்து கொண்டிருந்தனர். அவர்களைக் கடந்து ஒரு கருடன் பறந்து சென்றது. அதன் வாயில் ஒரு பாம்பு சிக்கியிருந்தது. ""அடடா...இந்த கருடனுக்கு கொஞ்சமாவது இரக்கமிருக்கிறதா! பாம்பை இந்தப் பாடு படுத்துகிறதே! என்றார் ஒரு ரிஷி. அவ்வளவு தான்! பறந்து கொண்டிருந்தவர் கீழே விழுந்து விட்டார். இன்னொருவர், ""இந்த பாம்பு இதுவரை எத்தனை பேரைத் தீண்டி உயிரைப் பறித்திருக்கும். இதற்கு இது தேவை தான்! என்றார். அவரும் கீழே விழுந்தார். மூன்றாவது ரிஷியோ, ""இவையெல்லாம் இயற்கையின் நிகழ்வுகள். கருடன் பாம்பைப் பிடிப்பதும், பாம்பு மனிதனைத் தீண்டுவதும் அவற்றுக்கென கடவுளால் ஏற்படுத்தப்பட்ட தர்மங்கள். அதை அவை தவறாமல் கடைபிடித்தன. அதை, தர்மத்தையே கடைபிடிக்காத மனிதர்கள் கேலி செய்தார்கள். தண்டனை அடைந்தார்கள், என்று சிந்தித்து கடவுளை வணங்கினார். சற்றுநேரத்தில் அவர் சொர்க்கத்தை அடைந்தார். இயற்கையை விமர்சிக்கவோ, அதன் போக்கை மாற்றவோ முயற்சித்தால், நமக்கும் தண்டனை தான் கிடைக்கும்.
|
|
|
|