பூஜையை ஆடம்பரமாக செய்வதை பலர் விரும்புவர். ஆனால் மானசீக பூஜை என்பது மனதளவில் செய்வது. இதற்கு வெளியில் கிடைக்கும் பூக்களை பயன்படுத்த தேவையில்லை.
அர்ஜுனன் தன் பூஜை அறையில் ஆடம்பரமாக வழிபடுவான். அங்கே நிறைய விளக்குகளையும், தங்கம், வெள்ளி பாத்திரங்களை பயன்படுத்தியும் சிவபூஜை செய்வான். அவன் சிவலிங்கத்தின் மீது நிறைய மலர்களைக் கொட்டுவான்.
அர்ஜுனனின் சகோதரனான பீமன் இதற்கு நேர்மாறானவன். அவன் சாப்பிடும் முன் கண்ணை மூடி சிவபெருமானை வழிபடுவான்.
தன்னை சிறந்த பக்தன் என்றும் சகோதரனை பக்தி இல்லாதவன் என்றும் அர்ஜுனன் நினைத்தான். அவனுக்கு பாடம் புகட்ட கிருஷ்ணர் விரும்பினார். அதற்காக சிவபெருமான் வசிக்கும் கைலாயத்திற்கு யாத்திரை செல்வோம் என அர்ஜுனனிடம் கூறினார். இருவரும் யாத்திரையை தொடங்கினர்.
வழியில் மலர் நிரம்பிய வண்டியை ஒருவன் இழுத்துக் கொண்டு வருவதை கண்டனர். ‘‘இவற்றை எங்கே எடுத்துச் செல்கிறாய்?” என வண்டிக்காரனிடம் அர்ஜுனன் கேட்டான்.
பதில் சொல்லாமல் சென்றான். ‘‘அவன் பின்னால் செல்வோம்’’ என்றார் பகவான் கிருஷ்ணர். இருவரும் பின்தொடர்ந்தனர். ஓரிடத்தில் மலர்கள் குவியலாக கிடக்க, கொண்டு வந்த மலர்களை அங்கு கொட்டினான். இது போல பலரும் மலர்களை கொட்டி விட்டுப் போவதை ஆச்சரியத்துடன் கண்டனர். அர்ஜுனனால் ஆவலை அடக்க முடியவில்லை.
‘‘இந்த மலர்களை எல்லாம் எங்கிருந்து கொண்டு வருகிறீர்கள்?” எனக் கேட்டான் அர்ஜுனன். ஆனால் யாரும் பதில் சொல்லவில்லை ‘‘தொந்தரவு செய்யாதீர்கள். எங்களை வேலை செய்ய விடுங்கள். பாதி மலர்களைத் தான் கொண்டு வந்திருக்கிறோம். இன்னும் நிறைய வண்டிகள் வர வேண்டியுள்ளது. இவ்வளவு மலர்களும் பாண்டுவின் மகனான பீமன் நேற்று சிவபெருமானுக்கு சமர்பித்தவை. இன்றைய வழிபாட்டுக்கு இன்னும் நான்கு மணி நேரம் தான் உள்ளது அதற்குள் மலர்களை அப்புறப்படுத்தியாக வேண்டும்” என்று கூறினர்.
‘‘அர்ஜுனனைப் பற்றித் தானே சொல்கிறீர்கள்” என சந்தேகமாக கேட்டான் அர்ஜுனன்.
“இல்லை... இல்லை... பீமன் தான் மானசீகமாக வழிபாடு செய்கிறார். அவரது சகோதரர் அர்ஜுனன் ஆடம்பரமாக பூஜை செய்பவர்’’ என்றான் அந்த வண்டிக்காரன். இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஒரு சிறிய கூடையில் மலர்களை அள்ளிக் கொண்டு வந்தான் ஒருவன். அவனிடம் கிருஷ்ணர், ‘‘இந்தக் கூடையில் இருப்பது யாருடையது?” எனக் கேட்டார்.
“அர்ஜுனன் பூஜித்தவை” என்றான் அவன்.
அர்ஜுனன் தலை குனிந்தபடி, ‘‘ஏன் இங்கு அழைத்து வந்தாய்? என் குறைகளை அங்கேயே சொல்லி இருக்கலாமே! நான்தான் பக்தியில் உயர்ந்தவன் என நினைத்தேன். ஆனால் மனதளவில் செய்யும் பூஜை தான் உயர்ந்தது என புரிந்து கொண்டேன்” என்றான்.
பகவான் கிருஷ்ணன் சிரித்தபடி, “அன்றாட பூஜை செய்வதை யாரும் விட்டு விடக் கூடாது. ஆழ்ந்த பக்தியுள்ளவர்களே மானசீக பூஜை செய்யலாம்’’ என்றார்.
யாரையும் இழிவாக நினைக்கக் கூடாது. எளிமை, பொறுமை, அக்கறை மட்டுமே பக்திக்கு அவசியம். – உமா பாலசுப்ரமணியன்